வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக மனைவி புகார்.. கட்சி பொறுப்பில் இருந்து திமுக பிரமுகர் விலகல்
திருப்பத்தூர்: கணவருக்கு 15 வயது அதிக வயதுடைய பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி புகார் எழுப்பியதை தொடர்ந்து, வாணியம்பாடி நகர திமுக செயலாளர் சாரதி குமார் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் திமுக நகர செயலாளராக உள்ளவர் சாரதி குமார். இவரது மனைவி ரம்யா . கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது கணவர் சாரதி குமார் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அவர் தனது புகார் மனுவீல் தன்னுடைய கணவர் சாரதி குமார், அவரைவிட 15 வயது அதிகம் உள்ள பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவருடன் சேர்ந்து தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாகவும் புகார் கூறினார். தனக்கு பெற்றோர் திருமணத்தின் போது போட்ட நகைகள் அனைத்தும் பறித்துக்கொண்டார் என்று ரம்யா தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் பெரும் சர்ச்சயை கிளப்பிய நிலையில் சாரதி குமார் கட்சியின் பொறுப்பில் இருந்த விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரக் கழகப் பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்வதாக தெரிவித்ததன் காரணமாக, அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நகரக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.