'சேரி பிஹேவியர்'... கமலுக்கு தெரியாமலா இருக்கும்?
- வன்னி அரசு
"சேரி behaviour " என்று ஒரு நடிகை இன்னொரு நடிகையை சொல்லியுள்ளார். எதையாவது பரபரப்பாக பேசி தொலைக்காட்சியின் ரேட்டிங்கை ஏற்றுவது அல்லது நிகழ்ச்சியை பெரிதாக விளம்பரப்படுத்துவது என்பது மலிவான- கேவலமான உத்தி.
நடிகர் கமல் ஹாசன் முற்போக்காளர் - பகுத்தறிவாளர் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளுகிறார். அவர் நெறியாளுகை நடத்தும் அந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு உரையாடல் இருக்கிறது என்பதை தெரிந்தே அதை 'promo' போடுவது - அதை அனுமதிப்பது என்பது நடிகர் கமலுக்கு அழகல்ல. அந்த மலிவுக்கு ஒத்துப்போவதாகதான் பொருள்! கமலின் இந்த போக்கு அந்த நடிகையின் ( காயத்ரி ) போக்கை விட மோசமானது.
இது ஒரு புறம் இருக்க, சேரி behaviour என்பது தமிழ் சமூகத்தின் மிக சிறந்த பண்பாடு என்பது
பெருமைக்குரிய விடயம். இன்னமும் தமிழ்மொழி அங்கேதான் மிச்சமிருக்கிறது. சேரியில்தான் இன்னமும் கூட்டுக்குடித்தனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சேரியில் தான் இன்னமும் சகிப்புதன்மை இருக்கிறது. சேரியில்தான் இன்னமும் மனிதநேயமும் இரக்க குணமும் பரவிக் கிடக்கிறது. இப்படிப்பட்ட behaviour அக்ரகாரத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அக்ரகாரத்தில் மட்டுமல்ல ஆதிக்க சமூகங்களிடமும் கூட இல்லை.
சேரி என்றாலே சேர்ந்து வாழ்தல், கூடி வாழ்தல் என்பது தான் பொருள். ஆகவே தான் சேரி பண்பாடு தமிழர்களின் மூத்த பண்பாடு என்று வரலாறு நமக்கு சொல்லித்தந்துள்ளது. இந்த பண்பாட்டை அக்ரகாரங்களும் அதன் அடிமை சாதிகளும் சீர்குலைக்க பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
உதாரணத்திற்கு "பற புத்தி அர புத்தி" என்று கிண்டலடிக்கின்றனர். அதாவது பறையர்களின் புத்தி அரைகுறையானதாம். ஆனால், நமது முன்னோர்கள் பௌத்த வழி வந்தவர்கள் "பறையர்களின் புத்தி என்பது அறம் சார்ந்த புத்தி" என்பதைத்தான் சாதியவாதிகள் என்று திரித்து பரப்புரை செய்து வருகின்றனர். ஆகவே தான் இந்த மலிவான விளம்பரத்திற்கு நாம் பலியாகிடக்கூடாது.
நாம் எப்போது கோபப் படவேண்டும் என்பதை நாம் தான் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் எப்போது யுத்தக் களத்துக்கு போக வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரி அவாள்களும், சாதி அடிமைகளும் அல்ல,
ஆகவே, உணர்ச்சி வசபடாமல் நாம் களமாடி பயணத்தை தொடருவோம்! அந்த நடிகைக்கு பின்னால் இருக்கிற கார்பரேட்கள், சாதியவாதிகள், காவிவாதிகள், முற்போக்கு முலாம் பூசிய கமல் போன்றவர்களை அம்பலபடுத்துவோம்!