ஒரு நாடகத்தின் இரு நடிகர்கள்!
-வன்னி அரசு
விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க அவசியம் இல்லை. சிபிசிஐடி விசாரணையே போதும் என்று முதல்வர் ஜெயல்லிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
டிஎஸ்பி விஷ்ணு பிரியா மரணம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் முதல்வர் ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை. சட்டப்பேரவையில் திமுக, இடது சாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஷ்ணுபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதை கேள்வி எழுப்ப முயன்ற போதும் முதல்வர் ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை.
வழக்கம்போல சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் காவல்துறை மிக மோசமான நிலையில உள்ளதென எல்லோரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் டிஜிபி திலகவதி கூட, சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் காவல்துறையில் சாதியம் இருப்பதாகவும் குற்றம் சுமத்தி உள்ளார். இதே போல ஜான் நிக்கல்சன் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரியும் தமிழக காவல்துறை செயலிழந்துவிட்டதாக குற்றம் சுமத்தி உள்ளார்.
இந்த சந்தடி சாக்கில் விஷ்ணுபிரியாவுக்காக பேசும் திமுக தலைவர் கருணாநிதி மறந்தும் கூட படுகொலையான கோகுல்ராஜ் குறித்தோ, தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் குறித்தோ அவரது கும்பலிடமிருந்து விஷ்ணுபிரியாவுக்கு மிரட்டல் இருந்து வந்தது பற்றியோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பதையும் மிக கவனமாக பார்க்க வேண்டும்.
ஆனால், நம் முதல்வரோ அட்டாக் பாண்டியை கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள் என்று தமிழக காவல்துறையை சட்டப்பேரவையில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அத்தனை புகழச்சிக்கும் காரணம் அந்த துறைக்கும் முதல்வர் அமைச்சராக இருப்பதாலோ என்னவோ.
ஆனால் ராமஜெயம், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஸ் படுகொலைகள் தொடர்பாக இதுவரை எந்த துப்பும் துலக்காத காவல்துறை குறித்து முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?
இரண்டாண்டுகளாக அட்டாக் பாண்டியை பிடிக்க முடியாமல் போனது காவல் துறைக்கே அவமானம் இல்லையா? காவல்துறைக்கே சவால் விடும் யுவராஜை பற்றி காவல்துறையை தனக்கு கீழ் வைத்திருக்கும் முதல்வரின் பதில் என்ன? யுவராஜைப் பற்றி பேச கருணாநிதி ஏன் தவிர்க்கிறார்?
விஷ்ணுப்ரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறக்காமல் வேறு சாதியில் பிறந்திருந்தால் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் சொல்லி இருப்பார்களோ நம் அரசியல்வாதிகள். முதல்வரும் சிபிஐ விசாரணை அறிவித்திருப்பாரோ? அமைச்சர்களை அனுப்பி அஞ்சலி செலுத்தி இருப்பாரோ?
பாவம் தலித் சமூகத்தில் பிறந்து, சொத்து சேர்க்க ஆசைபடாமல் மக்களுக்காக நேர்மையாக செயல்பட்ட விஷ்ணுபிரியாவின் மரணம் படுகொலையாக இருந்தாலும் அது இந்த அரசுக்கு ஒரு வெறும் தற்கொலை செய்தியாகவே தெரிகிறது. அந்தளவிற்கு சாதிய பார்வையோடு செயல்படுகின்றன அரசியல் கட்சிகளும் அரசும்.
தமிழகத்தில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல். காவல்துறையை மறு சீரமைக்க வேண்டிய கட்டாயமான சூழல் நிலவுகிறது.
(வன்னி அரசு தேர்ந்த பத்திரிகையாளர். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்)