திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்.. விஏஓ கடத்தியதாக புகார்... போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை விஏஓ கடத்தி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென மாயமாகியுள்ளார். அவரை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கடத்திச் சென்றதாக பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
திருக்கோவிலூரை அடுத்த மனம்பூண்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வேலை விஷயமாக விஏஓ குணசேகரன் பரனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
காதலாக மாறிய பழக்கம்
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.
திருமணத்துக்கு ஏற்பாடு
இந்த விஷயம் விக்னேஷ்வரியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் விக்னேஷ்வரியை கண்டித்துள்ளனர். மேலும் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணமும் பேசி முடித்துள்ளனர்.
விஏஓ கடத்திவிட்டதாக புகார்
இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த விஏஓ குணசேகரன், விக்னேஷ்வரியை அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் விஏஓ குணசேகரன் தங்கள் மகளை கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விஏஓ குணசேகரனையும் மாயமான இளம்பெண்னையும் தேடி வருகின்றனர். விஏஓ பெண்னை கடத்திவிட்டதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.