விஏஓ தேர்வு, குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய விஏஓ, குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையத்தின் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே தேர்வு எழுதுபவர்கள், தங்களது தகுதி, திறமை மேல் நம்பிக்கை வைத்து நன்றாக படித்து எழுத வேண்டும்.
நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள், டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாமதம் ஆனதால் முடிவுகளை வெளியிட முடியாமல் போனது. மிக விரைவில் குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
2016-17-ம் ஆண்டில் நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த அட்டவணை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டியே தயாராவதற்காக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.