குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் – டிசம்பர் 15க்குள் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 15க்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வனபாதுகாவலர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது 2 காலி இடங்கள் மட்டுமே உள்ளன.
அந்த 2 இடங்களும் பெண்களுக்குத்தான். ஆனால் தேர்வு முடிந்து முடிவு வெளியிடும்போது ஆண்கள் காலியிட பணிகளும் வரக்கூடும் என்று நினைத்து ஆண்களும் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. 9 ஆம்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு நடைபெற்றதை சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு ஆட்களை நியமிக்க எழுத்துத்தேர்வு நடைபெற்று வருகிறது. குரூப்-2 ஏ காலிப்பணியிடங்கள் 2846 இருந்தன. அந்த இடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது.
தேர்வை 4 லட்சத்து 23 ஆயிரத்து 800 பேர் மட்டுமே எழுதினார்கள். அதுபோல கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 342 காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் 15 ஆம் தேதிக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தயாராக உள்ளது. மேலும் 33 சுகாதார மருத்துவ அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான எழுத்துத்தேர்வும் நடைபெற உள்ளது. இது குறித்து அறிவிப்பு வர உள்ளது.