நூற்றாண்டு காணும் எம்.ஜி.ஆருக்கு 9.5 அடியில் சிலை.. தேவகோட்டையில்.. வி.ஏ.ஓக்கள் சங்கம் நிறுவுகிறது!
சென்னை: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஒன்பதரை அடியில் பிரமாண்ட சிலையை நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் என்ற பதவி எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க விஏஓக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஒன்பதரை அடியில் வெண்கலத்தில் இந்த முழு உருவச் சிலை அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் மற்றும் கவுரவத்தலைவர் இரா. போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் நல சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் என்று செயல்படுவதாக முடிவு செய்து இருக்கிறோம். அதன்படி, இந்த சங்கத்தில் மொத்தம் 12,500 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கத்திற்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பதவியினை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான 17.01.2017 அன்று எம்.ஜி.ஆரின் 9.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நிறுவப்படுகிறது. 1989-ல் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியை ஒழிக்க நினைத்த பாரதி அறிக்கையில் இருந்து பாதுகாத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த சிலையை திறக்க அழைப்பு விடுத்து இருக்கிறோம் என்றார் அவர்.