மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை... வராக நதியில் வெள்ளப்பெருக்கு!
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக வராக நதியில் எற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரியகுளத்தில் உற்பத்தியாகும் வராக நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதி வழியாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டடுள்ளது.