வர்தா புயலால் கூட அசைக்க முடியாத அடையாறு ஆலமரம்! 450 வருடம் பழமையானது
வர்தா புயலால் சென்னை அடையாறு பிரம்மஞான சபையில் உள்ள ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.
சென்னை: அண்மையில் சென்னையை தாக்கிய வர்தா புயலால் அடையாறு பிரம்மஞான சபையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் உள்நாட்டு மரங்களை தவிர 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.
பிரம்மஞான சபை நியூயார்க்கில் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் இந்திய கிளை சென்னை அடையாறு ஆற்றங்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை அருகில் 1882ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதலில் 28 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த சபை தற்போது 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு 150 இனங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதில் 450 ஆண்டுகள் பழமையான அடையார் ஆலமரமும் ஒன்று. பிரதான மரம் அழிந்து விட்டாலும் அதன் நூற்றுக்கணக்கான விழுதுகள் வேரூன்றி, சுமார் 4 ஆயிரத்து 670 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இந்த மரத்தை நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். வர்தா புயல் சென்னையின் பல்வேறு பகுதிகளை சின்னாபின்னமாக்கிய நிலையில் பிரம்மஞான சபை வளாகத்தையும் விட்டு வைக்கவில்லை.
இந்தப்புயலில் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்துள்ளன. இருப்பினும் அடையார் ஆலமரத்துக்கு மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிரம்மஞான சபையின் பொது மேலாளர் எஸ். அரிகரராகவன், இங்கு ஐஐடிக்கு இணையாக மரங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.பெரும்பாலன மரங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வளாகத்தில் வளாகத்தில் நுழைந்தாலே அடர்ந்த மரங்களால் இருள் சூழ்ந்திருக்கும். அதனால் இங்கு இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்தா புயலால் பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வளாகத்துக்கு வந்து செல்கிறேன் என்று கூறிய அரிகரராகவன் இந்த வளாகத்தின் நிழலும், அமைதியும் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார்.
தற்போது புயலால் 300க்கும் மேற்பட்ட மரங்கள் இங்கு சாய்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வளாகத்துக்கு வரவே பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு விழுந்துள்ள மரங்களில் பெரும்பாலானவை குல்மொகர் போன்ற வெளிநாட்டு மரங்கள்தான் என்றும் உள்நாட்டு மரங்களான வேம்பு, புங்கன், இலுப்பை உள்ளிட்ட மரங்கள் விழவில்லை என்றும் அரிகரராகவன் கூறியுள்ளார்.
மேலும் 450 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரம்மஞான சபை வளாகத்தில் பழைய பசுமை திரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றும் மரங்கள் விழுந்த பகுதியில் உள்நாட்டு மரங்களை மட்டுமே நட முடிவு செய்திருப்பதாகவும் அரிகரராகவன் தெரிவித்துள்ளார்.