சுழற்றி அடிக்கும் காற்று: சென்னை வரும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தம்
சென்னை: வர்தா புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னை வரும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இந்நிலையில் சென்னைக்கு வரும் பல ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தண்டவாளங்களில் மரங்கள் விழுவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.