மதுரை "டான்" வரிச்சியூர் செல்வம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!
மதுரை: குற்றச்செயல்களில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம் உட்பட 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்த மதுரை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாநில பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம், செந்தில், சுப்பிரமணி, தேனியைச் சேர்ந்த பார்த்திபன், மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த ரூபேஸ்தீன் பாவா ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டித்துரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மதுரை அண்ணாநகர் கிழக்குத் தெரு சாலையில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கீரைமணி என்ற மணிமாறன் குப்பைத் தொட்டியில் குண்டுகளை வீசியதாகவும், இதில் சில ரவுடிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் கூறினர். நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் (45), அவரது கார் ஓட்டுநர் பார்த்திபன் (38) ஆகியோர் மதுரை மாவட்ட 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நவம்பர் 12ஆம் தேதி சரணடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வரிச்சியூர் செல்வம், கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் உள்பட சுமார் 25 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.