வருணபகவானே மழையை நிப்பாட்டு... தஞ்சாவூரில் சிறப்பு பூஜை
தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் பேயாத பெருமழை கொட்டி வருவதால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் துயர் நீங்கவும், மழை நிற்க வேண்டியும் தஞ்சாவூர் பெரியகோவிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் வரை தண்ணீருக்காக தவமிருந்தது தமிழகம். நல்ல மழை பெய்யவும், நீர் நிலைகள் நிறையவும், கோவில் கோவிலாக யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் அக்டோபர் இறுதியில் தொடங்கிய கனமழை விட்டு விட்டு கொட்டியதில் அளவிற்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழையை நிறுத்த இப்போது சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி உடனுறையான பெரியகோவிலில்தான் இந்தியாவிலேயே வருண பகவான் தனி சன்னதியில் மேற்கு புறத்தில் வீற்றிருக்கிறார். வேறு எங்கும் இதுபோல் தனி சன்னதியில் வருண பகவான் இருப்பது இல்லை.
சென்னையில் கொட்டும் மழை
சென்னை, கடலூர் காஞ்சிபுரத்தில் பெய்யும் தொடர் மழை நிற்க வேண்டியும், மக்களை துன்பங்களில் இருந்து காக்கவும், அவர்கள் குடும்பத்தினருடன் நலமாக வாழவும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாக குருக்கள் குருமூர்த்தி சுவாமிகள் தெரிவித்தார்.
மழைக்காக பாடல்
1500 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் மழை வேண்டியும், மழை நிற்பதற்கும் பாடபெற்ற திருபதிகம் செய்யப்பட்ட பாடலை ஓதுவார் மூர்த்திகள் கொண்டு வருண பகவான் சன்னதியில் பாடபெற்றது. எண்ணெய், பால், மஞ்சள், திரவியம், தயிர், சந்தனம் இன்னும் பல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
டெல்டாவில் மழை
எட்டு வருடங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தன. மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர். மழை நிற்க வேண்டி அப்போதும் இதுபோல் வருணபகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மழை நின்றது.
வருணபகவான் காப்பார்
அதேபோல இந்த ஆண்டும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், இப்போது செய்யப்பட்ட பூஜையால் மழையை நிறுத்தி சென்னை மக்கள் மற்றும் கடலோரமாவட்ட மக்களை வெள்ளத்தில் வருணபகவான் காப்பார் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளார் குருமூர்த்தி சுவாமிகள்.
மழை வேண்டி யாகம் நடத்திய காலம் போய், தமிழகத்தில் மழை நிற்க யாகம் நடத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது! வருண பகவான் மனது வைப்பாரா?