அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
அதிமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை: அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தற்போது 2 ஆக பிரிந்துள்ள நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சி வேறு. இப்போது எடப்பாடி தலைமையிலான ஆட்சி வேறு. இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைய வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.
இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு தேவையான நிதிகளையும், திட்டங்களையும் பெற்று வரவேண்டும். விவசாயிகள் பிரச்சனையை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றார்.