Exclusive: இடைத்தேர்தலில் திமுகவுக்கு தமாகா மறைமுக ஆதரவு.. பலிக்குமா வாசன் போடும் ஸ்கெட்ச்?
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க தமாகா தலைவர் வாசன் முடிவு செய்துள்ளார்.
சென்னை: திமுக கூட்டணிக்குள் இணைந்து விட வேண்டும் என்று முயற்சிகளை எடுத்த ஜி.கே.வாசன், அதற்காக உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்தி காய் நகர்த்தினார். வாசனின் விருப்பத்திற்கு மு.க.ஸ்டாலினும் ஒத்துழைத்தார். ஆனால், இதன் பின்னணி மர்மங்களை அறிந்த கருணாநிதி, கூட்டணிக்குள் வாசன் வருவதற்கு தடா போட்டார்.
வாசனை உள்ளே இழுத்துவர ஸ்டாலின் முயன்றதன் பின்னணி மர்மங்களை ஏற்கனவே 'ஒன்இந்தியாவில்' பதிவு செய்திருக்கிறோம். காங்கிரஸ் பக்கம் திமுக சாய்ந்த நிலையில் திக்கற்று நின்ற வாசனுக்கு அடித்தது அதிருஷ்டம். உள்ளாட்சித் தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தால், அப்பாடா கட்சியின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இல்லையெனில் "தனித்து போட்டியிட்டு நம்முடைய செல்வாக்கு என்னவென்பது வெட்ட வெளிச்சமானால் நாம் உருவாக்கி வைத்த பிம்பம் உடைந்துப்போயிருக்கும். இப்போ அந்த பதற்றம் இல்லை" என தற்காலிக நிம்மதிப் பெருமூச்சு விட்டார் வாசன்.
இந்த நிலையில், தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆயத்தங்களில் கட்சிகள் மூழ்கியுள்ளன. இந்த சூழலில், இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என த.மா.கா.வின் நிலைப்பாட்டை சமீபத்தில் அறிவித்திருந்தார் ஜி.கே.வாசன். இப்படி அறிவித்திருந்தாலும் சில மறைமுக கணக்குகள் போடப்பட்டு வருகிறது.
வாசனின் சொந்த மாவட்டம் தஞ்சை. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளில் தஞ்சையும் ஒன்று. தஞ்சை மாவட்டம் வாசனின் சொந்த மாவட்டமாக இருந்தாலும் அந்த மாவட்டத்தில் த.மா.கா.வுக்கு பெருத்த செல்வாக்கு இல்லை. அதாவது, தீர்மானிக்கும் சக்தியாக த.மா.கா. அந்த மாவட்டத்தில் கூட வளர்ச்சியடையவில்லை.
இருப்பினும் தஞ்சை தொகுதியில் பரவலாக கணிசமான வாக்குகளை த.மா.கா.வைத்திருப்பதால், கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடம், திமுகவை ஆதரிக்குமாறு ரகசிய கட்டளையிட்டுள்ளார் வாசன் என்கிறார்கள் த.மா.கா.வின் மேலிட பொறுப்பாளர்கள் சிலர்.
ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல் ஆளாக வாசன் வந்திருந்து சிறப்பித்து கொடுத்ததில், ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியாம். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது எப்படியும் திமுக கூட்டணிக்குள் த.மா.கா.வை சேர்த்து விட வேண்டும் என்பதை குறிக்கோளாக வாசன் வைத்திருக்கிறார். அதற்கான நம்பிக்கை ஸ்டாலின் தரப்பிலிருந்து வாசனுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால், திமுகவை ஆதரிக்கும் ரகசிய முடிவை அவர் எடுத்ததாக த.மா.கா.வினர் சொல்கின்றனர்.