வாசன் விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: குமரி அனந்தன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அகில இந்திய தலைமை கருதுவதாக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
1996ல் த.மா.கா. உருவான நிலை என்பது வேறு. தற்போது உள்ள நிலை வேறு. 1996ல் நடிகர் ரஜினிகாந்த் மூன்று முறை நரசிம்மராவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆதரவு தெரிவித்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. அந்த சூழ்நிலையில்தான் மரியாதைக்குரிய மூப்பனார் அவர்கள், வெளியே சென்று தமிழ் மாநில காங்கிரசை அமைத்தார். அப்போது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.
ஜி.கே.வாசன் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்தார்.