மக்கள் நல கூட்டணியின் கொள்கையை பாராட்டும் வாசன்! கூட்டணிக்கு ரெடியா?
சிவகாசி: மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நால்வவரும் ஒரே கொள்கையோடு செயல்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து மக்கள் நல கூட்டணி என்ற பெயரில், கூட்டணி அமைத்துள்ளன.
இக்கூட்டணியில் இணையவருமாறு, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு மக்கள் நல கூட்டணி தலைவர்கள் பகிரங்கமாக அழைப்புவிடுத்துள்ளனர்.
வாசனிடம் கேள்வி
இந்நிலையில், சிவகாசியில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனிடம், நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு வாசன், நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றபோதிலும், மக்கள் நல கூட்டணி குறித்து மதிப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரே கொள்கை
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு தலைவர்களும் ஒரே கொள்கையோடு செயல்படுகின்றனர் என்றும், வாசன் பாராட்டு தெரிவித்தார்.
மார்ச் மாதம் முடிவு
வாசன் மேலும் கூறியதாவது: மார்ச் மாதத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன். மக்கள் நலக் கூட்டணியில் இணைய தமிழ் மாநில காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் என்று வாசன் தெரிவித்தார்.
முதல்வர் வேட்பாளர்
மக்கள் நல கூட்டணியில், இன்னும் பல கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், அக்கூட்டணி, இன்னும் தனது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.