பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு... உடைகிறது வாசனின் த.மா.கா.?
சென்னை: சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு த.மா.கா.வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழ் மாநில காங்கிரஸ் உடையும் எனத் தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பாக உறுதியான எந்த ஒரு முடிவெடுக்கும் எடுக்காமல் தடுமாறி வரும் ஜி.கே.வாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் இறுதியாகி கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 5 முறை மாற்றமும் செய்துவிட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. மக்கள் நலக் கூட்டணியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாக உள்ளன.
எப்பகேட்டாலும் விரைவில்..
பாஜக தலைமையில் சிறு கட்சிகள் இணைந்து ஒரு அணியை அமைத்துள்ளன. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த முடிவையும் எடுக்காமல் எப்போது கேட்டாலும் 'விரைவில்' கூட்டணி குறித்து அறிவிப்போம் என்ற பல்லவியைத்தான் ஜி.கே. வாசன் பாடி வருகிறார்.
குழப்பத்தில் தமாகா
15 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்த போதும் தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அடம்பிடிப்பதால் இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலையில் நிற்கனும் இல்லாவிட்டால் இடமில்லை என அதிமுக கூறிவிட்டது. இதையடுத்து திமுகவுடன் தமாகா மூத்த தலைவர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாஜக, மநகூ காத்திருப்பு
இன்னொருபுறம் பாஜகவும் தமாகாவுக்கு வலை விரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நலக் கூட்டணியோ, தமாகா எப்படியும் தங்களுடன் வந்துவிடும் என காத்திருக்கிறது.
அதெப்படி பாஜகவுடன்?
திமுக, அதிமுக, மநகூ, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்றுக் கொள்ளும் தமாகா தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க மறுக்கிறார்கள். காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்த நாம் மதவாத பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைப்பது என்பது அவர்கள் கேள்வி.
பீட்டர் தலைமையில் கலகக் குரல்
குறிப்பாக பீட்டர் அல்போன்ஸ் இந்தக் கூட்டணியை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் எந்த நேரத்தில் வாசனுக்கு எதிராக பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கவும் தயாராகி வருவதாகத் தெரிகிறது.