காவிரிப் பிரச்சினை தலை தூக்கும்போதெல்லாம் தலையெடுக்கும் "கலகக்கார" வாட்டாள் நாகராஜ்!
சென்னை: காவிரி நதிநீர், ஒகேனக்கல், தாளவாடி என பல விவகாரங்களிலும் தமிழகத்துக்கு எதிராக கலகமூட்டிவிடுவதையே 'தொழிலாக' வைத்திருப்பவர் வாட்டாள் நாகராஜ்.
தமிழகத்தைவிட கர்நாடகாவில் கன்னட இன உணர்வு, மொழி உணர்வு, கலாசார பாதுகாப்பு அதிகம்தான்.. கன்னடர்கள் தங்களுக்கு என தனிக் கொடியே வைத்திருக்கிறார்கள்.. கர்நாடகா தனிமாநிலமான நாளை கொண்டாடி வருகிறவர்கள்..
இது ஒரு தேசிய இனத்துக்கு இருக்கும் அடிப்படையான உணர்வுகள்... இது தமிழ்த் தேசிய இனம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் இருக்க வேண்டிய பொதுப் பண்பு..
ஆபத்தானவர்கள்...
ஆனால் எளிதில் மக்களை உணர்ச்சிவசப்படக் கூடிய இந்த விஷயங்களை வைத்து சொந்த சுயநலனுக்காக அரசியல் செய்வது யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான்.. அதுவும் சகோதரர்களாக இருக்கும் இரு இனமக்களிடையே காழ்ப்புணர்ச்சி, வெறுப்பை விதைக்கும் வாட்டாள் நாகராஜ் வகையறாக்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..
வன்முறையா வழி?
தமிழகம்- கர்நாடகா தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.. இந்த பிரச்சனைகளுக்கு நியாயப்படியும் சட்டப்படியும்தான் தீர்வு காண முடியுமே தவிர வன்முறை வழியல்ல..
குளிர்காய்தல்...
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் ஒட்டுமொத்தமும் கர்நாடகாவுக்கு சொந்தம்; நீங்க ஒகேனக்கலை மறந்துடுங்க... காவிரியை நினைக்காதீங்க... தாளவாடிக்குள் நுழையாதீங்க என்று அவ்வப்போது சவடால் விடுகிறவர் வாட்டாள் நாகராஜ்... இவரது தூண்டுதலில் லெட்டர் பேடு கட்சிகள் ஒன்றிணைந்து கன்னட அமைப்புகள் என்ற பெயரில் தமிழகம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையையும் வன்முறையாக்கி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்...
கபாலிக்கும் எதிர்ப்பு
ரஜினியின் கபாலி படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க வாட்டாள் நாகராஜ் கும்பலோ அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருந்தது கொடுமையிலும் கொடுமை.. இந்த வாட்டாள் நாகராஜை எம்.எல்.ஏ.வாக்கிய கன்னடர்கள் அதன் பிறகு கண்டுகொள்வதே இல்லை..
வரவேற்போம்
இந்த வாட்டாள் நாகராஜ் என்னதான் முக்கினாலும் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியாக கன்னடர்களிடையே உருவெடுக்கவே முடியாமல்தான் இருக்கிறது... தற்போது காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கர்நாடகா அரசு நீரை திறந்துவிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை.
வாலை காட்டும் வாட்டாள்
ஆனால் தமிழகம் தொடர்பான பிரச்சினை தலை தூக்கும்போதெல்லாம் வாட்டாள் நாகராஜ் தனது வாலை காட்ட ஆரம்பித்து விடுவார். பெரும்பாலான இவரது போராட்டங்கள் கோமாளித்தனமாகவே இருந்தாலும் இன உணர்வை அது டச் செய்வதால் அதையும் கர்நாடகத்தில் கவனித்து அடடா போட ஆள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
பந்த்
இதோ இப்போதும் கூட வாட்டாள் நாகராஜ் கிளம்பி விட்டார். செப்டம்பர் 9ம் தேதி பந்த் அறிவித்துள்ளனர் கர்நாடகத்தில். அன்று வாட்டாள் நாகராஜ் கோஷ்டி என்னென்ன சேட்டைகளைச் செய்யக் காத்திருக்கிறதோ!