தகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு!
தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறது துணைவேந்தர் நியமன விவகாரம். சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணைவேந்தர் நியமனம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேதனை தெரிவித்துள்ளார்.
9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில்தான் நியமித்துள்ளேன், மற்றவர்கள் பலர் பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவியை பெற்று இருக்கிறார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டி அளித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறிய நிலையில் இவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனது நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது. விதிமுறைகளை பின்பற்றியே தேர்வானேன்.
3 பேர் நேர்முகத்தில் பங்கேற்றோம். மூன்று பேரின் தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின்தான் நான் தேர்வானேன். முன்னாள் ஆளுநர் வித்தியாசகரா ராவ் விதிமுறையை பின்பற்றித்தான் என்னை தேர்வு செய்தார், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.