ஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதன் வேட்பாளர்களின் விபரமாவது:-
ஆர்.கே.நகர்:
ஆர்.கே.நகர் தொகுதியில் கல்வியாளர் வசந்தி தேவி போட்டியிடுகிறார். சமூக ஆர்வலராகவும் இவர் அறியப்பட்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணி செய்து ஒய்வு பெற்றவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக 2002முதல் 2005 வரை பதவி வகித்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வசந்தி தேவி. கல்லூரிகளில் பேராசிரியை, முதல்வர், இந்திய சமூக அறிவியல் கவுன்சிலின் ஆய்வாளர், திட்டக் குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார் வசந்தி தேவி.
குன்னம்
குன்னம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக ஜெ.முகம்மது ஷா நவாஸ் போட்டியிடுகிறார். தந்தை பெயர் ஜைனுல் ஆபிதீன், தாயார் பெயர் ராபியத் பீவி. மனைவி பெயர் பர்வீன், 5 வயது மகன் முகம்மது ரைஹான். 33 வயதாகும் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். எழுத்தாளர் - ஆவணப்பட இயக்குநர் - தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர் என பன்முகம் கொண்டவர். 2016 தேர்தலில், தேமுதிக தமாகா மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வானூர்
வானூர் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாங்கணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். மெத்தப் படித்தவர் ரவிக்குமார். விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். சுமார் நாற்பது நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 2006 - 2016 வரை தமிழக சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
காட்டுமன்னார்கோவில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். 1962ம் ஆண்டு பிறந்த திருமாவளவன், தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, அவருக்கு மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல்.திருமாவளவன் மதுரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல்.திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் மதுரையில் ஏற்றினார். எம்.பியாக இருந்துள்ளார். மங்களூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்கும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம்
அரக்கோணம் தொகுதியில் ஜி.கோபிநாத் என்கிற இளஞ்சேகுவரா போட்டியிடுகிறஆர். 48 வயதான இவர் கட்சியில் தலைமை நிலைய செயலாளராக இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தீவிரக் கட்சிப் பணியாற்றும் இவர், அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
புவனகிரி
புவனகிரி தொகுதியில் ம.செ. சிந்தனைச் செல்வன் போட்டியிடுகிறார். 51 வயதான இவரது சொந்த ஊர் நெய்வேலி. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த பொதுச் செயலர்
சோழவந்தான்
சோழவந்தான் தனித் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இரா. பாண்டியம்மாள். 5ம் வகுப்பு படித்துள்ள இவர் இந்து பறையர் பிரிவைச் சேர்ந்தவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருடன் பிறந்தவர்கள் 12 பேர். லாரி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். மதுரை கீரைத்துறையில் வசிக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் மகளிரணி மாவட்டச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலர், தற்போது மதுரை மக்களவைத் தொகுதிச் செயலாளராக இருக்கிறார். தேர்தல் இது அவருக்கு முதல் முறையாகும்.
அரூர்
அரூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கோவேந்தன் போட்டியிடுகிறார். இவரிடம் ரூ. 13.37 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனுவுடன் இணைத்துள்ள சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெங்களுர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில், காலி மனைகள் உள்ளன. மூன்று கார்கள் உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், 1.88 கோடி ரூபாய்க்கு கடன் உள்ளது.
ராசிபுரம்
ராசிபுரம் தனித் தொகுதியில் ஜி. அர்ஜூன் போட்டியிடுகிறார். 44 வயதான அர்ஜூன் தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி செயலாளராக இருக்கிறார்.
செய்யூர்
செய்யூர் தனித் தொகுதியில் போட்டியிடும் சிறுத்தைகள் வேட்பாளர் பெயர் எ. எழில் கரோலின். 46 வயதான இவர் மறைந்த மத்திய அமைச்சர் தலித் எழி்ல்மலையின் 2வது மகள் ஆவார். இவரது கணவர் பெயர் எத்திராஜ். இரும்பேடு கிராமம் சொந்த ஊராகும். வழக்கறிஞரான எழில் கரோலின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது தந்தையின் பாதையில் போராடி வருபவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்த அவர் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
மயிலம்
மயிலம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பாலாஜி போட்டியிடுகிறார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
சேலம் தெற்கு
சேலம் தெற்கு தொகுதியில் கோ. ஜெயச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளராக பதவியில் உள்ளார்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இரா. பன்னீர்தாஸ். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
ஊத்தங்கரை
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் சி. கிருஷ்ணன் என்கிற கனியமுதன் போட்டியிடுகிறார். இவர் தர்மபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
துறையூர்
துறையூர் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் பெயர் சுஜாதேவி என்கிற ஆதிமொழி. இவர் கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாளராக பதவி வகிக்கிறார்.
வந்தவாசி
வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மேத்தா ரமேஷ். வந்தவாசி ஒன்றியகுழு துணை தலைவரான இவர் கட்சியின் தொகுதிச் செயலாளராக இருந்து வருகிறார். உள்ளார். இவரது மனைவி கத்திஜா மங்கலமாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். மேத்தா ரமேஷின் தந்தை செ.குப்புசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார்.
வேலூர்
வேலூர் பொதுத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்துல் ரகுமான் போட்டியிடுகிறார். இவர் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அ.பாலசிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1998-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து, 2000-இல் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில செயலாளரானவர். 2008 - 2012ம் ஆண்டுகளில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக பதவி வகித்த பாலசிங்கம், 2013-இல் இருந்து தலைமை நிலையச் செயலாளராக இருக்கிறார். பாலசிங்கம் முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி
பொன்னேரி தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரின் பெயர் மீஞ்சூர் செந்தில். இவர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் ஆவார்.
ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மா.வீரக்குமார். இவர் மாநில செயற்குழு உறுப்பினர்.
மானாமதுரை
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் தீபா என்கிற திருமொழி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
பரமக்குடி
பரமக்குடி தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரின் பெயர் ம.இருளன். 2007 ல் கட்சியில் இணைந்த இவர், 2008ல் மாவட்ட செயலாளர், 2010ல் விவசாய அணி மாநில செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2014ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி செயலாளராக இருந்து வருகிறார்.
ஆத்தூர் (சேலம்)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ப.ஆதித்யன் ஆவார். இவர் கலைஇலக்கியப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
திருவிடை மருதூர்
திருவிடைமருதூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக வக்கீல் சா.விவேகானந்தன் என்பவர் போட்டியிடுகிறார்.