கம்யூ. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டுப் போகும்போது அடக்க ஒடுக்கமாக போகப்படாதா சார்??
சென்னை: அதிமுகவில்தான் இப்படிப்பட்ட காட்சிகளை ஏகத்திற்கும் காணலாம். ஆனால் அதிமுக காரரா இருப்பாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் ஒருவரை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் க.பீம்ராவின் பிரசாரத்தின்போது காண நேரிட்டது.
மதுரவாயல் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. பீம்ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் இவர். இவருக்கு ஆதரவாக தேமுதிக, தமாகா மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்து கொண்டுள்ளனர்.
நேற்றும் பீம்ராவுக்கு ஆதரவாக வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை நடந்தது. இதில் தேமுதிகவினரும், பிற கட்சியினரும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் அதிகம் காணப்பட்டனர். அதிலும் ஒருவர் ரொம்பவே தனித்துத் தெரிந்தார்.
அதிமுகவினர் போல ஏகப்பட்ட நகை நட்டுக்களுடன் நடமாடும் நகைக் கடை போல ஒரு டெர்ரராக காட்சி தந்தார் அவர். கையில் பெரிய சைஸ் வளையம், விரலில் பெரிய சைஸ் மோதிரம், கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலிகள், பெரிய மீன பார்க்கவே பயங்கரமா காட்சி அளித்தார்.
கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமை, அமைதி, அடக்கம் என்பார்கள். ஆனால் இந்த பிரமுகர் பீம்ராவுக்கு அருகில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டபோது வேட்பாளரை விட்டு விட்டு இவரைத்தான் பலரும் வேடிக்கை பார்த்தனர். கம்யூனிஸ்டுகளின் பிரசார வரலாற்றிலேயே முதல் முறையாக என்று கூறும் அளவுக்கு இப்படி ஒரு நபர் வந்தது இதுவே முதல் முறையாகும்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்குப் பக்கத்தில் இப்படி ஒரு "தோரணை" தேவையா என்று சிலர் முகம் சுளிக்கவும் செய்தனர்.