தமிழிசைக்கு எதிரான புகாரை வாங்க போலீஸ் மறுப்பு... சென்னையில் வி.சி.க.வினர் மறியல்!
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிரான மனுவை வாங்க போலீசார் மறுப்பு தெரிவித்ததால்காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது புகார் அளிக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புகார் மனுவை வாங்க போலீசார் மறுத்ததால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நடிகர் விஜயை கட்சியில் சேர்க்க பாஜக அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி இருந்தார் இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை விஜயை கட்சிக்கு கொண்டு வந்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும் மிரட்டி பணிய வைத்து அவர்களது இடத்தை அபகரிப்பது திருமாவளவன் தான் என்றும் அவரது அலுவலகம் உள்ள இடம் கூட கட்டப்பஞ்சாயத்து செய்து தான் அபகரிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
Recommended Video
தமிழிசையின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக புகார் கொடுக்க வந்தனர். அப்போது அவர்களின் புகாரை போலீசார் வாங்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழிசையை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டவாரே காவல்நிலையம் அருகில் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது நேரம் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் போராட்டக்காரர்களிடம் பேசி மனுவைப் பெறுவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து மறியலை கைவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலைய வாசலிலேயே மனுவைப் பெற வேண்டும் என்று காவர்களுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.