தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டது மத்திய அரசு.. ஆளூர் ஷாநவாஸ் காட்டம்
மறைமுகமாக முதலில் விவசாயத்தையும், பின்னர் ஜல்லிக்கட்டையும் தடை செய்த மத்திய அரசு தற்போது பொங்கல் விடுமுறையையும் ரத்து செய்து தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டதாக ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்
சென்னை: பொங்கலுக்கு பொது விடுமுறை என்பதை ரத்து செய்து தமிழர்களின் கடைசிக் கோவணத்தையும் உருவி விட்டது மத்திய அரசு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை கட்டாய பொது விடுமுறைகள் பட்டியலிலிருந்து இன்று நீக்க விட்டது மத்திய பாஜக அரசு. தமிழர்களை நேரடியாக இது தாக்கும் செயலாக அனைவரும் பார்க்கின்றனர். இந்த செயலுக்கு ஆளுர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். பயிரிட்டால் தானே அறுவடை செய்ய முடியும். காவிரியில் நம்மை வஞ்சித்து, பயிரிட முடியாமல் செய்து விட்டனர். பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஏறு தழுவுதல் விளையாட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளம். அதற்கும் தடை விதித்து விட்டனர். பொங்கல் விடுமுறை மட்டுமே எஞ்சியிருந்தது. அந்தக் கோவணத்தையும் இப்போது உருவி விட்டனர். தமிழர் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.