ம.ந.கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் விரைவில் வெளியேறும்: இளங்கோவன் ஆரூடம்
ஈரோடு: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற்றால் அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கும். ஆகையால் மக்கள் நலக் கூட்டணி உடைய வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விரைவில் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும் என கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசு வரி விதிக்க முயற்சித்து வருவதாகவும் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.