டாக்டர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன் திட்டம்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை பாரிமுனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில தலைமை அலுவலகத்தை திருமாவளவன் நேற்று திறந்து வைத்தார். இதில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் த.பார்வேந்தன், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார், மாநில வர்த்தக அணியின் துணைச் செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரிடம் இருந்து மக்கள் நலக் கூட்டணி நல்ல பதிலை எதிர்பார்க்கிறது. தமிழகத்தில் தலீத் சமூகத்தினருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது.
மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ராமதாஸ் அவதூறு பரப்புவதாகவும், இதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதாக திருமாவளவன் கூறினார்.