விசிகவின் வெளிச்சம் டிவி பற்றி அவதூறு - ஃபேஸ் புக்கில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க புகார்
வெளிச்சம் டிவி சேனலில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் மற்றும் வெளிச்சம் டிவி சேனலில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெளிச்சம் டிவி இயக்குநர் பனையூர் பாபு நேற்று அளித்த புகார் மனுவில், முன்னாள் பேராசிரியர் சிவக்குமார் செல்வராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த 3ம் தேதி காலை 11.30 மணிக்கு உளவு துறை தகவல் என்ற தலைப்பில், சசிகலா நடராஜனிடம் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் நடத்தும் வெளிச்சம் டிவி சேனலுக்கு கேமேன் தீவுகளில் இருந்து பினாமி முதலீட்டு கம்பெனிகள் வழியாக என்னும் நூதன முதலீட்டு முறையின் மூலம் சசிகலாவின் கணவர் நடராஜன் 225 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்தது அமலாக்க துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் மற்றும் வெளிச்சம் டிவி சேனல்களில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது". என்று பதிவு செய்துள்ளார். இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும் செய்தி. வளர்ச்சியடைந்து வரும் வெளிச்சம் டிவியை முடக்கும் வகையில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். எனவே பேஸ்புக் பக்கத்தில் அவதூறு பரப்பிய முன்னாள் பேராசிரியர் சிவக்குமார் செல்வராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்த சிவகுமார்
இந்த நிலையில் தனது பதிவை நீக்கி அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் பேராசிரியர் சிவகுமார், ஓர் FB நபரின் பகிர்ந்த பதிவு அடிப்படை ஆதாரம் அற்றது என நண்பர்களால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் அந்த பதிவு முற்றிலும் நீக்கப்பட்டது.
பயணத்தில் இருந்ததால் செய்தியை படிப்பதில் சிறிது காலதாமதம் ஆகி விட்டது. Sharing சிவக்குமார் என தங்களால் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக அன்புடன் அழைக்கப்படுவதின் காரணம் செய்தியின் உண்மை மட்டும் அல்லாது சாமனிய மக்களுக்கு தேவையான அறிவியல் , பொருளாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு கொண்டதாகவும் , எந்த தனி நபரின் மீதோ அல்லது நிறுவனம் மீதோ விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் உள்ளது என்பதாலும் தான் என்பதனை அடியேன் அறிவேன்.
அந்த நம்பிக்கை காப்பாற்றுவேன். தங்களால் சுட்டி காட்டப்படும் தவறுகள் உடனடியாக இது போன்று சரி செய்யப்படும். "தவறிக்கு மன்னிப்பும் புரிதலுக்கு நன்றியும்" என்று பதிவிட்டுள்ளார்.