இதுக்குப் பிறகும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்?... விசிக ரவிக்குமார் அடுத்தடுத்து டுவீட்!
பாஜக பெற்ற வாக்குகளை பார்த்த பின்னரும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் எனத் தோன்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : பாஜக பெற்ற வாக்குகளை பார்த்த பின்னரும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் எனத் தோன்றவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் கூறியுள்ளார். இதே போன்று இருவரின் கைகளை சேர்த்துவைத்த பாஜக மூன்றாவதாக தினகரனின் கையையும் அதில் சேர்த்துவிடுமா ? என்றும் வினவியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கடந்த முறை ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா பெற்ற வாக்குகளுக்கு இணையாக இந்த முறை டிடிவி. தினகரன் வாக்குகளை பெற்றுள்ளார். இதே போன்று வாக்குகள் வித்தியாசம் என்பதும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்பதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தினகரனின் வெற்றி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதிமுக பலமிழக்கும்
அதில் கட்சி வாக்குகளையும் பணம் அடித்துச்சென்றுவிடும் என்பதைக் காட்டுகிறது. ஆர்கே நகர் தினகரனின் வெற்றி அதிமுகவை ஒரே கட்சியாக்கி தமிழக அரசியலை மீண்டும் திமுக, அதிமுக என்னும் இருதுருவ அரசியலுக்குள் கொண்டுவரும். இதே போன்று இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக பலத்தை அதிமுக முற்றாக இழந்துவிடும் என்று டுவீட்டியுள்ளார்.
ஓ.பிஎஸ் தவறு செய்துவிட்டார்
ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் வரலாறு வழங்கிய வாய்ப்பை குறுகியகால பலன்களுக்காகப் பலியிட்டனர். இப்போது அவர்கள் அதை உணரக்கூடும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் ரவிக்குமார்.
|
பாஜக நிலைமை இது தான்
தமிழ்நாட்டில் காலை அல்ல கட்டை விரலைக்கூட பாஜகவால் ஊன்ற முடியாது என்பதைக் காட்டுகிறது ஆர்கே நகர். இருவரின் கைகளை சேர்த்துவைத்த பாஜக மூன்றாவதாக தினகரனின் கையையும் அதில் சேர்த்துவிடுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
|
இனியும் கட்சி தொடங்குவாரா ரஜினி?
ஆர்கே நகரில் பாஜக வாங்கும் வாக்குகளைப் பார்த்த பிறகும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை என்றும் ரவிக்குமார் கருத்து பதிவிட்டுள்ளார். ரவிக்குமாரின் இந்த கருத்துக்கு பலரும் பதில் டுவீட்டுகளை போட்டு வருகின்றனர். நீங்க இத்தனை பேர் கூட்டணி வச்சும்,திமுகவுக்கு அங்க டெபாசிட் கூட கிடைக்காதோனு பேசிட்டு இருக்காங்க,அத பத்தி ஒரு வார்த்தை பேசாம,இன்னும் கட்சியே தொடங்காத ரஜினியோட எதிர்காலத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க என்று கிண்டலாக பதில் டுவீட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.