காவிரி உரிமைகள் மீட்பில் அதிமுக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை... திருமா குற்றச்சாட்டு!
காவிரி உரிமைக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் ஒற்றுமையாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி : காவிரி உரிமைக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் ஒற்றுமையாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காவிரி உரிமை மீட்புப் பயண தொடக்க விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது : தமிழகத்தை ஒரு உயர் கொதிநிலையில் வைத்திருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலோடு செயல்படுவதை உணர்த்தும் விதமாக ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
காவிரி நீர் உரிமைக்காக ஆளும் கட்சியோடும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசினார். ஆனால் எதிர்க்கட்சியான திமுகவையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய வாய்ப்பை ஆளும் கட்சி தவறவிட்டுவிட்டது.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்தி இருக்க வேண்டும், அப்படி முடியாத பட்சத்தில் மீண்டும் ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டதா, அதற்கான அனுமதி ஏன் மறுக்கப்பட்டது என்று அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் கட்சி விளக்கவில்லை.
பிரதமரை சந்திக்க எந்த நடவடிக்கையையும் ஆளும் கட்சி எடுக்கவில்லை. இதனால் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகக்கூடி காவிரிக்காக செயல்பட்டு வருகிறோம். அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மத்திய அரசை கண்டிக்காமல் திமுகவையும், காங்கிரசையும் தான் விமர்சித்தார்கள்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் முகத்திரையை கிழிக்காமல் திமுகவை வசைபாடுவதைத் தான் இப்போதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஸ்டாலின் முன் எடுத்து வரும் நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் முகத்திரைகளை கிழித்துக் காட்டுகின்றன.
திமுக சார்பில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழகம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அணி திரள்வதைத் தான் முழுஅடைப்பு வெற்றி உணர்த்துகிறது. முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடியும் இந்த காவிரி மீட்புப் பேரணி மத்திய அரசையும், கர்நாடக அரசையும் நடுநடுங்க வைக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.