அதிபர் ஆட்சி முறையை திணிப்பதை கைவிட வேண்டும்: விசிக மாநில சுயாட்சி மாநாடு வலியுறுத்தல்
இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிப்பதை கைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை: இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்ற்றப்பட்டன.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்காமல் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். லோக்சபா, மாநிலங்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனிதா, கவுரி லங்கேஷ் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம்
தீர்மானங்கள் விவரம்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால் படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள் சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் கார்த்திக்ராஜா, ஓடைப்பட்டி கருப்பையா, பெருங்குடி மாரிச்சாமி, அரியலூர்- சிறுகடம்பூர் நந்தினி, பெரம்பலூர்- குரும்பலூர் ஐஸ்வர்யா, திருச்சி- திருப்பாஞ்சலி கதிரேசன், வந்தவாசி- புளியரம்பாக்கம் வெங்கடேசன், ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றுக்கென வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்தலாம்.
அன்னிய படையெடுப்பு போன்ற ஆபத்தான காலங்களில் மட்டும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே கையாளலாம். மற்ற நேரங்களில் மாநிலங்கள் தமது அதிகாரங்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். இதுதான் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் விளக்கம். ஆனால் கடந்த எழுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றைப் பார்த்தால், மாநிலங்களின் அதிகாரங்கள் மெள்ள மெள்ள பறிக்கப்பட்டு பெருவாரியாக மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்கென மத்திய அரசும், தமிழக அரசும் அவ்வப்போது பல்வேறு ஆணையங்களை அமைத்துள்ளன. அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் போதிய அக்கறைகாட்டவில்லை. அதற்கு மாறாக, மாநிலங்களுக்கென இருக்கும் ஒருசில அதிகாரங்களையும் பறிப்பதிலேயே முனைப்பாக உள்ளனர். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்பது பிரிவினைவாத கோரிக்கையும் அல்ல. மாநில மக்களுக்குரிய பிரச்சினைகளையும் தேவைகளையும் மத்திய அரசைவிட அந்தந்த மாநில அரசுகளே சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தமுடியும்.
" இந்திய சுதந்திரத்தை சாதித்த தேசிய இயக்கமானது, பிராந்திய உணர்வுகளைச் சரியாக உள்வாங்கிக் கட்டப்பட்டதே ஆகும். ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படுகிற மொழிகளின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்ட பிறகுதான், காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்தது. தேசிய உணர்வுக்கும் மாநிலங்களின் ஒருமைப்பாட்டுக்கும் இடையிலான கூட்டுறவே நாம் சுதந்திரத்தை வென்றெடுக்க உதவியது " என 1955 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியது இன்றைக்கும் பொருந்தகூடியதாக உள்ளது.. தேசிய ஒருமைப்பாடு என்பது 'மாநில சுயாட்சி' உரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடும், மாநில சுயாட்சியும் எதிரெதிரானவை அல்ல. அவை, கூட்டாட்சி என்னும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
உண்மையில் இந்தியாவை வலிமையானதொரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், மாநிலங்கள் தன்னாட்சியோடு செயல்படுவது அவசியமாகும். எனவே, இத்தகைய மாநில சுயாட்சி உரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது. .