லோக்சபா சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட விசிக வலியுறுத்தல்
சென்னை : நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சட்ட வல்லுனர்கள் பலர் எச்சரித்துவருகின்றனர். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும்தான் இது வழிவகுக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1999-ல் இந்தப் போக்கு 68 சதவீதமாக இருந்தது, 2014-ல் அது 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சினைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகளும், மாநில நலன்களை முன்னிறுத்தும் மாநிலக் கட்சிகளும் ஓரங்கட்டப்படும். இந்தப் போக்கானது, அடித்தள மக்களை நோக்கி சனநாயகம் பரவலாவதற்குத் தடையாக அமைந்துவிடும். எனவே, மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்துவது என்னும் முயற்சியைக் கைவிட வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
.அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம்
மத்திய, மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள், 'மத்திய பட்டியல்' 'மாநிலப் பட்டியல்' 'பொதுப்பட்டியல்' - என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது:
1)மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து அவற்றைச் செயல்படுத்தப் பணிக்கும் வகையில், சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்ட உறுப்புகளான( பிரிவுகள்) 154 மற்றும் 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.
2)அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.
3)மாநிலங்களுக்குச் சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 256, 257, 339(2), மற்றும் 344(6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.
4)பொதுப்பட்டியல் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும்;
பொதுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகுமென ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 254 திருத்தப்படவேண்டும்.
5)மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 213 (1) நீக்கப்படவேண்டும்.
6)மாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 249 நீக்கப்படவேண்டும்.
7)சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 169 திருத்தப்படவேண்டும்.
8)மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் சட்ட உறுப்பு 257(ஏ) நீக்கப்படவேண்டும்.
9)வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்காணும் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.