இந்தியாவில் ஆளுநர் பதவியை ஒழிக்க விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்
சென்னை : ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, தம்மை நியமிக்கும் கட்சியின் முகவர்களாகவே அவர்கள் செயல்படுகின்றனர்.மத்தியில் ஆளுகிற கட்சியல்லாத பிற கட்சிகளின் அரசுகள் மாநிலங்களில் அமையுமெனில் அவற்றுக்கு தேவையற்ற நெருக்கடிகளைத் தருவதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் ஆளுநர்கள் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றனர். சிலவேளைகளில் மாநில அரசுகளைக் கலைப்பதற்கும் ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசின் ஆட்சிநிரவாகத்திற்கு ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே, ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. இந்நிலையில,
மாநில மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் பதவியை ஒழிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலை
மாநில அரசுகள்அனைத்துவகை பொருளாதார தேவைகளுக்கும் மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மாநில அரசுகள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதையும் எவ்வளவு செலவழிக்கலாம் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. கிராமப்புற வேலை உறுதித்திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் உட்பட மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களாகும், மத்திய அரசின் நிதி நல்கை இல்லாவிட்டால் அவற்றைத் தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) ன் படி நிதி ஆணையம்தான் மத்திய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும்.
வரியை வசூலிப்பது மத்திய அரசு, செலவுசெய்வதற்கு மட்டும் மாநில அரசு என்ற நிலை மாற்றப்படவேண்டும். மத்திய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும். இதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.