கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்: வி.சி.க.
சென்னை : அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போதே கல்வியைப் பொதுப் பட்டியலில் வைக்கவேண்டும் என்ற திருத்தம் சில உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. பள்ளிக் கல்விக்கு மேலுள்ள மாநில அதிகாரங்களைக் குறைத்திட வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தத் திருத்தங்கள் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்றவர்களின் வாதத்தால் நிராகரிக்கப்பட்டன.
அடுத்து, உயர் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றலாம் என 1965 ஆம் ஆண்டு 'சப்ரூ கமிட்டி' பரிந்துரை செய்தது; கல்வி முழுவதையும் பொதுப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 1971 இல் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இறுதியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம்தான் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் தற்போது 'நீட்' என்னும் 'தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு' நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்கவேண்டும் எனத் தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்களுக்கும், இதனால் தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
கல்வி வளர்ச்சியிலும், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியிருப்பதிலும் ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது.
தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'மாவட்டம்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி' என்னும் திட்டத்தைப் போன்றதொரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இவ்வாறு, மருத்துவக் கல்வியில் மிகவும் சிறப்பான நிலையில் வளர்ச்சியடைந்திருக்கும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வைத் திணிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
மாநில அரசின் கல்வி அதிகாரத்தை முற்றிலும் பறித்து, அவற்றை மத்தியில் குவிக்க முனையும் பாஜக அரசின் அணுகுமுறை தமிழக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.
எனவே, நீட் நுழைவுத் தேர்வை இந்திய அளவில் முற்றாக ரத்து செய்வதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.