மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைத்திட விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
சென்னை : மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்- 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. அதற்கு எதிரான உரிமைக் குரல்கள் 1960-களிலேயே ஒலிக்கத் தொடங்கின. எனவே, மத்திய அரசு 1966-லேயே மத்திய மாநில உறவுகளை ஆய்வுசெய்வதற்காக "நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை" அமைத்தது. அது பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் மன நிறைவுகொள்ளாத அன்றைய திமுக அரசு, 1969 ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. அத்துடன், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பியது . அன்று தமிழக அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம், இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
பின்னர்,1973-இல் பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சி அனந்தபூர் சாகிப் தீர்மானத்தை இயற்றவும்; 1979-இல் மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவந்த இடதுசாரி அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடவும் அதுவே தூண்டுகோலாக அமைந்தது.
அவற்றின் காரணமாக மத்திய மாநில உறவுகளை ஆராய 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையமும் 2007-ஆம் ஆண்டு நீதிபதி பூஞ்சி ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. .
இந்நிலையில், தற்போதைய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்துவந்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.
இவ்வாறான தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளில் நிலவும் சிக்கல்களை அடையாளம் காணவும், மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் கூடுதலாக அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளின் தேவைகளை ஆராயவும் ஏதுவாக, மீண்டும் ஆணையம் ஒன்றை அமைத்திடவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அதிபர் ஆட்சிமுறையை முயற்சியை முறியடிப்போம்
"மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி" என்பது திராவிட இயக்கம் (திமுக), இந்திய சனநாயகத்துக்கு வழங்கிய கொடை எனலாம். 1960-களில் தமிழ்நாட்டில் வெடித்தெழுந்த மொழி உரிமைப் போராட்டத்தின் நீட்சியாக முன்வைக்கப்பட்டதே ' மாநில சுயாட்சி' முழக்கம். 1960- களில் இருந்ததைவிட தற்போது மிகவும் முனைப்போடும் மூர்க்கத்தோடும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிப்பதில் தீவிரமாக உள்ளது.
அத்துடன், இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் வகையில், "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி , ஒரே தேர்தல், ஒரே ஆட்சி" என்கிற ஃபாசிச நிலையை நோக்கி இந்தியாவைக் கொண்டு செல்கிறது. குறிப்பாக, தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு ' அதிபர் ஆட்சி ' முறையிலான ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை இந்தியாவில் அமைப்பதே அவர்களின் நோக்கமென தெரியவருகிறது.
1999- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்கென நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஆணையம் ஒன்றை பாஜக அரசு அமைத்தது. அப்போது நாடெங்கும் எழுந்த வலுவான எதிர்ப்பின் விளைவாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதே நோக்கத்தோடுதான் இன்றும் பாஜக அரசின் நகர்வுகள் உள்ளன என்பதை அறியமுடிகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக முறையை பலவீனப்படுத்தி படிப்படியாக இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைத் திணிக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.