விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் கேட்டு நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தாங்கள் கேட்டபடி இரண்டு தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு அக்கட்சி நிர்வாகி ஒருவன் அண்ணா அறிவாலய வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
16வது லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுவிட்டன. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களாம் சூடுபிடித்துள்ளது.
தமிழக கட்சிகள் தேர்தல் வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி'யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையின் பலனாக அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் ‘மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, வருத்தம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
அப்போது எதிர்பாரா விதமாக அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்'' என்று கூறியவாறு, திடீரென்று தன்னிடம் உள்ள பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டார். ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தீக்குளிப்பேன், தீக்குளிப்பேன்'' என்று மிரட்டல் விடுத்தார்.
அந்த நபரை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றனர். இதைப்பார்த்த தொல்.திருமாவளவன் உடனே ஓடிச்சென்று அந்த நபரை மீட்டார். பின்னர் தனது காரிலேயே ஏற்றி அழைத்துச்சென்றார். தீக்குளிக்க முயன்ற அந்த நபர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி என்பது தெரியவந்தது.