காஞ்சிபுரம் அருகே விசிக நிர்வாகி பெண் தொடர்பால் மர்ம மரணம்?
காஞ்சிபுரம் அருகே பெண் ஒருவரது வீட்டில் வி.சி.க கட்சி நிர்வாகி ரவிக்குமாரின் பிணத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் : வண்டலூர் அருகே காட்டாங்கொளத்தூர் அருகே பெண் ஒருவரது வீட்டில் பிணமாகக் கிடந்த வி.சி.க நிர்வாகியின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக ஊழியராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.
ரவிக்குமாரின் மனைவி கவுரி. இவர் காஞ்சிபுரத்தை அடுத்த நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலை கவுரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது கணபதி நகரில் உள்ள மைதிலி என்பவரது வீட்டில் தனது கணவர் ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து மறைமலை நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்த ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ரவிக்குமாரின் மனைவி கவுரி மற்றும் உறவினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ரவிக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.