திருமா போட்டியிடும் தொகுதி இன்று அறிவிக்கப்படவில்லை... !
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இருப்பினும் அதில் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்லை.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல்களில் திமுக - அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதனால், 25 ஆண்டுகளாகியும் கட்சியை வளர்க்க இயலாமல் மற்றவர்களைச் சார்ந்தேயிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், இம்முறை மாற்றத்தை வேண்டி, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை எழுப்பினார் திருமா. பின்னர் அதன் தொடர்ச்சியாக மக்கள் நலக்கூட்டணி உருவானது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவும், தமாகாவும் சேர்ந்ததன் மூலம் மேலும், அக்கூட்டணி வலுப்பெற்றுள்ளதாக அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் அதிக தொகுதிகளைப் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொகுதிப் பங்கீட்டின் போது, முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியை கேட்டுப் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மாலை வாக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை.
11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திருமாவளவன் இன்று முதல் கட்டமாக அறிவித்தார்.