சட்டசபை சிறப்பு கூட்டம்... திமுக அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்களுக்கு திருமா வரவேற்பு #dmk
காவிரி பிரச்சனைக்காக ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: காவிரி பிரச்சனைக்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்பதாக அக்கூட்டத்தில் பங்கேற்காத விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
சென்னையில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, பாஜக பங்கேற்கவில்லை.
திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்பியது மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள். ஆனால் அக்கூட்டணியின் இதர கட்சிகள் அதை நிராகரித்ததால் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்க இயலாத நிலை இருப்பதாக அறிவித்தது.
காங்கிரஸ், தமாகா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். அதே நேரத்தில் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட திமுக தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டம் வலியுறுத்தியிருப்பதால் நிச்சயம் அதிமுக அரசு இதை ஏற்காது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.