தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதிதான்.. திருமாவளவன் புகழாரம்
தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதி என்று விசிக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
சென்னை : தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்றுமே கருணாநிதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு முக்கியத் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று 95 ஆவது பிறந்தநாள் காணும் கருணாநிதிகருணாநிதிநீடூழி வாழ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நெஞ்சார வாழ்த்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராளுமை வாய்ந்தவர்
மேலும், தனது 14ஆவது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த தலைவர் கருணாநிதி கடந்த எண்பதாண்டுகளாக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தனக்கு நிகர் தானே' என்கிற வகையில் மகத்தான சாதனைகள் படைத்த வரலாற்று நாயகனாக விளங்குகிறார். அரசியல் களத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர். குறிப்பாக கலை, இலக்கியம் போன்ற தளங்களில் பேராளுமை வாய்ந்த படைப்பாளியாக கோலோச்சியவர்.
50 ஆண்டுகால அரசியல்
பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர், தனது வலிமைவாய்ந்த அரசியல் உத்திகளால் கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தன்னையே மையப்படுத்தித் தமிழக அரசியலைச் சுழல வைத்தவர். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் சமூகநீதியின் பாதுகாப்பு அரணாக செயலாற்றியவர்.
சமூகப் புரட்சி
குறிப்பாக ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்' என்னும் குடியிருப்புகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி, அமைதியான முறையில் ஒரு மகத்தான சமூகப் புரட்சியை நிகழ்த்தியவர். இன்றைக்கும் சாதி மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி இன்று மூப்பின் காரணமாக செயல்பட இயலாத நிலையிலிருந்தாலும், அவரே இன்றைக்கும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவராக விளங்குகிறார்.
இத்தகைய பேராற்றல் வாய்ந்த கருணாநிதி நூறாண்டுக்கும் மேல் நலமுடன் வாழ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மனமார வாழ்த்துகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.