வேதாந்தா குழும இயக்குநரால் தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது.. கடம்பூர் ராஜூ அதிரடி
வேதாந்தா குழும இயக்குநரால் தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: வேதாந்தா குழும இயக்குநரால் தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் அடிக்கல் நாட்டுவிழா, முடிக்கப்பட்ட பணிகள் திறப்பு விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 11 ஆம் தேதி கோவில்பட்டி நகரில் நிரந்தரமாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 2-வது குடிநீர் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டுக்குகொண்டு வரும் விழா நடைபெறுகிறது என்றார்.
குடிநீர் விநியோகம்
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக ரூ. 15 கோடி மதிப்பிட்டில் குடிநீர் விநியோகம் திட்டத்தினையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றும் அவர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு திட்டம்
மேலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
அரசை கட்டுப்படுத்த முடியாது
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழும இயக்குநர் தமிழக அரசினை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வேதாந்தா குழும இயக்குநர் அவரது கருத்தினை தெரிவித்துள்ளார். அரசு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது எந்த குழுமமும் தடையாக இருக்க முடியாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வைகோ எம்பியாக இருந்தபோது
தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்தாது என்றும் அவர் கூறினார். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது தான் கெய்ல் திட்டம் வந்தது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
அடிக்கடி கூட்டணி மாறுவதால்
அப்போது எல்லாம் குரல் கொடுக்காமல் அரசியலுக்காக அடிக்கடி கூட்டணி மாறுவதால் வைகோ தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.