நிரம்பியது வேடந்தாங்கல் ஏரி.. விதம் விதமான பறவைகள் வருகை.. இன்று சரணாலயம் திறப்பு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதால் பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரும்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக வேடந்தாங்கல் மற்றும் அதன் அருகேயுள்ள கரிக்கிளி ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
முகாமிடும் பறவைகள்:
இதனைத்தொடர்ந்து ஏராளமான பறவைகள் தற்போது வேடந்தாங்கலுக்கு வரத்தொடங்கி உள்ளன. தற்போது 5,554 வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலில் முகாமிட்டுள்ளன. இதனையடுத்து பார்வையாளர்களுக்காக இன்று முதல் வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி ஏரிகள் திறக்கப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு:
முன்னதாக வேடந்தாங்கல் ஏரிக்கு நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி, சென்னை வன உயிரின காப்பாளர் கே.கீதாஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அங்கு இருந்த வனச்சரக அலுவலர் கே.டேவிட் ராஜூடன் ஏரி தொடர்பான விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.
பறவைகளின் எண்ணிக்கை:
ஏரியை சுற்றிலும் உள்ள நீர்மட்டம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். பறவைகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அருகில் உள்ள கரிக்கிளி ஏரியிலும் ஆய்வு நடந்தது. அதன் பின்னரே வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி ஏரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.
குஞ்சு பொறிக்கும் பறவைகள்:
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் இனப்பெருக்கத்திற்காக பர்மா, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, சுவீடன், நேபாளம் போன்ற பல நாடுகளில் இருந்து பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரும். இங்கு 7 முதல் 8 மாத காலம் வரை தங்கும். உரிய காலத்தில் இந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்ததும் அவைகளை தன்னுடனே அழைத்துச் சென்றுவிடும்.
ரம்மியமான ஏரி:
ஏரிக்கு மழைநீர் வரும்வகையில் ஏரியை சுற்றிலும் இருக்கும் 5 கால்வாய்களை ஆழப்படுத்தினோம். கடந்த 8 ஆம் தேதி பெய்த மழைக்கு கால்வாய்கள் மூலம் எதிர்பார்த்த நீர் கிடைத்தது. இதனால் ஏரி முழுவதும் நீர் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது. ஏரி நிரம்பிய அடுத்த நாளில் இருந்து பறவைகள் வரத்தொடங்கிவிட்டன.
5,554 பறவைகள் வருகை:
தற்போது 2,020 நத்தை கொத்தி நாரை, 1,180 வெள்ளை அரிவாள் மூக்கன், 320 நீர்க்காகம், 200 சாம்பல் நாரை, 1,003 வக்கா, 41 பாம்பு தாரா, 70 ஊசிவால் வாத்து, 520 வெள்ளை கொக்கு, 200 உன்னி கொக்கு என மொத்தம் 5 ஆயிரத்து 554 வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் ஏரிக்கு வந்துள்ளன. அதேபோல கரிக்கிளி ஏரிக்கு 50 ஊசிவால் வாத்துகள் வந்துள்ளன.
காலை முதல் மாலை வரை:
இந்த வருடம் வேடந்தாங்கல் ஏரிக்கு வரும் பார்வையாளர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பறவைகள் சரணாலயம் திறந்திருக்கும்.
3 விதமான டவர்கள்:
பறவைகளை பார்க்க 3 விதமான டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. 40 அடி உயர டவரில் டெலஸ்கோப் மூலம் பறவைகளை பார்க்கலாம். 20 மற்றும் 10 அடி உயர டவர்களில் பைனாக்குலர் மூலம் பறவைகளை கண்டு ரசிக்கலாம். நுழைவு கட்டணம் தவிர வேறு எந்த கட்டணமும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதில்லை.
முகாமிட்டிருக்கும் பறவைகள்:
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த பறவைகள் இங்கு முகாமிட்டிருக்கும் என்றும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.