தப்பு பண்ணிட்டீங்களே திமுக.. வேதாரண்யத்தில் விஸ்வரூபம் எடுக்கும் வேதரத்தினம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். சென்னை, கன்னியாகுமரி மற்றும் வேதாரண்யமே அவை. இதில் வேதாரண்யம்தான் அனைவரிடத்திலும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது... காரணம் எஸ்.கே. வேதரத்தினம்.
ஒரு தனி நபருக்கு தொகுதியில் பலம் இருப்பது இப்போதெல்லாம் ரொம்ப அபூர்வம். அப்படிப்பட்டவர்கள் இன்று குறைந்து போய் விட்டனர் அல்லது இல்லவே இல்லை.
திருநாவுக்கரசர், முத்துச்சாமி, தாமரைக்கனி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் போன்றோர் எல்லாம் எம்.ஜி.ஆரின் நிழலில் இருந்தவர்கள் என்றாலும் கூட ,தங்களுக்கென்று சொந்த பலத்தையும் கொண்டு தனித்தன்மையுடன் விளங்கியவர்கள். அப்படிப்பட்ட தனித்தன்மையுடன் கூடியவர்தான் எஸ்.கே. வேதரத்தினம்.
3 முறை திமுக எம்.எல்.ஏ
நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் இவர் ஒரு ஜாம்பவான். திமுகவில் முக்கிய அடையாளமாக திகழ்ந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டசபைத் தேர்தல்களிலும் தொடர்ந்து ஜெயித்தவர்.
ரொம்ப சிம்பிள்
தொகுதியில் மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்திலும் நற்பெயருடன் திகழ்ந்தவர் வேதரத்தினம். இதற்கான காரணம் மிக மிக சிம்பிளானது.
எளிமை.. எப்போதும்
மிக மிக எளிமையானவர் வேதரத்தினம். யாராலும் எளிதாக அணுக முடியும் என்ற நிலையில் இருப்பவர். எந்த நேரத்தில் உதவி கேட்டாலும் ஓடி வந்து நிற்கக் கூடியவர். மொத்தத்தில் நம்மோடு ஒருவராக, நமக்கானவராக தொகுதியை வலம் வந்து கொண்டிருப்பவர்.
முத்தரசனை வீழ்த்தியவர்
2001 சட்டசபைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் போட்டியிடிட்ட (இப்போது சிபிஐ மாநில செயலாளராக இருக்கும்) ஆர். முத்தரசனை வீழ்த்தியவர் வேதரத்தினம். அதேபோல கடந்த 2006 தேர்தலில் அதிமுகவின் ஓ.எஸ். மணியனைச் சாய்த்தவர்.
திமுகவுடன் மோதல்
இந்த நிலையில் 2011 தேர்தலில் திமுக வேதராண்யத்தில் போட்டியிடவில்லை. பாமகவுக்கு கொடுத்தது. இதனால் வேதரத்தினம் ஏமாற்றமடைந்தார். நல்ல வெற்றி வாய்ப்பு இருந்தும் திமுக போட்டியிடாமல் போனதால் அதிருப்தி அடைந்த வேதரத்தினம் சுயேச்சையாகப் போட்டியிட்டார். 2வது இடத்தைப் பிடித்து அசரடித்தார். இதனால் திமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார்.
மீண்டும் திமுக
திமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட இவரது பணிகள் ஓயவில்லை. தொடர்ந்து மக்களுக்காக ஓடி ஓடி உதவிய அவரைப் பார்த்து திமுக மீண்டும் 2013ல் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டது. ஆனால் ஓரம் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டார் வேதரத்தினம்.
பாஜகவில்
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் வேதரத்தினம். அத்தோடு தனது கதை முடிந்ததாக திமுக தரப்பு அஞ்சியது. இப்போது அந்த அச்சம் பல மடங்கு பெருகியுள்ளது. காரணம் வேதாரண்யம் தொகுதியில் வீசி வரும் வேதரத்தினம் அலை.
மீனவ நண்பர்
வேதரத்தினம், வேதாரண்யம் பகுதி மீனவர்களின் காவல் தெய்வம் போல விளங்குகிறார். அவர்களது பிரச்சினைகளை உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று சரி செய்வதில் கில்லாடி. அதேபோல தன்னைத் தேடி வரும் பல பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மக்களின் அன்பை சம்பாதித்துள்ளார்.
ஆதரவாளர்களை விட பக்தர்கள் ஜாஸ்தி
திமுகவில் முரட்டு பக்தர் என்று பெரியசாமியைச் சொல்வர்கள். அதேபோல வேதரத்தினத்திற்கும் ஆதரவாளர்களை விட பக்தர்களே ஜாஸ்தி. ஆனால் முரட்டுத்தனமானவர்கள் யாரும் இவருடன் கிடையாது. அன்பால் கூடியவர்கள் இவர்கள்.
காங்கிரஸுக்கு பாஜக ஓகே.
மேலும் முந்தைய காங்கிரஸ் மத்திய அரசை விட தற்போது மத்திய பாஜக அரசு, இலங்கை விவகாரத்தை சரியாக கையாண்டு வருகிறது. அதன் காரணமாக முன்பு போல இப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை. இதனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை எந்த மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற நிலை. இதுவும் பாஜக மீது வேதரத்தினம் திரும்ப ஒரு முக்கியக் காரணம், அவர் போய் விட்டதால் தொகுதி மக்களும் - வேதரத்தினத்துக்காக- பாஜக மீது பாசப் பார்வையைத் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
குறை ஒன்றும் இல்லை
வேதரத்தினம் மீது எந்தப் புகாரும் இல்லை. 12 வருடம் திமுக ஒன்றியச் செயலாளராக செயல்பட்டுள்ளார். அனைத்துக் கட்சியினரின் அன்பையும் பெற்றவர். "வேதையின் மன்னன்" என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
வெற்றி வாய்ப்பு
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் வேதாரண்யம் தொகுதியில் பாஜகவுக்கு 16 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இது மிகப் பெரியது. திமுகதான் அங்கு முன்னணியில் இருந்தாலும் கூட, அதிமுக 2வது இடத்தில் இருந்தாலும் கூட பாஜகவின் ஆதரவு அதாவது வேதரத்தினத்துக்கான ஆதரவு நிச்சயம் மிக அதிகமாகவே இருக்கும். அவரால் வெல்லவும் முடியும் என்று அரசியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.
மோடி வரவால் பலமடையும்
இந்தக் காரணத்தால்தான் மோடியை வேதாரண்யத்திலும் பேச வைக்கிறது பாஜக. அவரது வரவால் வேதரத்தினத்தின் கை மேலும் ஓங்கும் என்று நம்பப்படுகிறது.
உள்ளூரில் கோலோச்சி வரும் வேதரத்தினத்தை இழந்தது திமுகவுக்கு நஷ்டம்தான்...!