உன் சாவு என் கையில்... இசைப்பல்கலை துணை வேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல்
சென்னை: சென்னை அடையாறு அருகே உள்ள இசை பல்கலையின் பூட்டை உடைத்து சூறையாடிய மர்ம நபர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை உள்ளது. இதன் வேந்தர், முதல்வர் ஜெயலலிதா; துணைவேந்தர் பிரபல வீணை கலைஞர் வீணை காயத்ரி.
இவர், பல்கலைக் கழகத்தில் பல படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். பல கல்லுாரிகளுக்கும், இசை மற்றும் கவின் கலை தொடர்பான படிப்புகளுக்கும், இந்த பல்கலை மூலம் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
சனி ,ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமையன்று காலை வழக்கம் போல், பல்கலையின் ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, பல்கலை அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தன. துணைவேந்தர் அறை, நிதி நிர்வாகி அறை உள்ளிட்ட, ஐந்து அறைகளில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. வேந்தர் தமிழக முதல்வர் ஜெயலலிதா, துணைவேந்தர் வீணை காயத்ரி ஆகியோரின் படங்கள் உடைக்கப்பட்டிருந்தன.
அனைத்து அறைகளிலும் பெரிய காகிதத்தில், துணைவேந்தர் வீணை காயத்ரியின் பெயர் எழுதி, அவரை கொலை செய்வதாகவும்,
'உன் சாவு என் கையில்...' என்றும், தமிழ், ஆங்கிலத்தில் எழுதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்களுக்கு மத்தியில், இசை பல்கலை உள்ளது. காவலாளியும், 24 மணி நேர பணியில் இருப்பார். பல்கலை கழகத்தின் முன்பக்கத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள இந்த பல்கலையில் மர்மநபர்கள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பட்டினப்பாக்கம் போலீசில், பல்கலை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் 'பின்பக்கச் சுவர் வழியாக உள்ளே நுழைந்திருக்கலாம்' என, பல்கலை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். உடைக்கப்பட்ட பூட்டுகளில் பதிந்து இருந்த கைரேகைகள், தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள துணைவேந்தர் வீணை காயத்ரி, தனிப்பட்ட முறையில் எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. நானும் யாரையும் மனம் புண்படும்படி நடந்ததில்லை. என்னை மிரட்டுவதற்கான காரணம் தெரியவில்லை; போலீசார் விசாரிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.