ஆந்திரா அரசுக்கு எதிராக போராட்டம்:தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி கைது- சிறையில் அடைப்பு!
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 அப்பாவித் தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திரா அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உள்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து, ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களுடன் சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பை தமிழக முன்னேற்றப்படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி தலைமையில் முற்றுகையிட முயன்றனர். திருவேற்காடு அருகே அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே 20 அப்பாவி ஏழை கூலித்தொழிலாளர்களை முன்கூட்டியே கைதுசெய்து கட்டிபோட்டு சுட்டுப்படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், படுகொலையானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகபட்ச உதவித்தொகைகள் வழங்கிடவும், அவர்களின் குடும்பத்தார்க்கு அரசு வேலை வழங்கிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பூமொழி தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப்பொதுச் செயலாளர் ராஜி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயகுமார், சேலம் மாவட்டத்தலைவர் மணி, சேலம் மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், சேலம் மாநகரத்தலைவர் ராமு, மாநகர பொருளாளர் ஆட்டோ பிரகாஷ், மாநகர துணைத்தலைவர்கள் குமரேசன், லட்சுமணன்,லெனின் உள்ளிட்ட எராளமானவர்கள் பங்கேற்று ஆந்திர அரசுக்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் கடும் கண்டன முழக்கமிட்டனர்.