நல்லது செய்வார் எடியூரப்பா!' - வீரலட்சுமியின் திடீர் நம்பிக்கை
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை அடுத்து அழர் தமிழர், கன்னடர்களுக்கான பகையை முறியடிப்பார் என்று தமிழர் முன்னேற்ற படையின் தலைவி வீரலட்சுமி நம்பிக்கை தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதைக் கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், ' தமிழர், கன்னடர்களுக்கான பகையை முறியடிப்பார் எடியூரப்பா' என வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி.
கர்நாடக தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளுக்கு பெரும்பான்மை இருந்தும், எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்க அழைப்புவிடுத்தார் ஆளுநர் வஜுபாய். இன்னும் 15 நாள்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால், எதிர்முகாம்களில் இருந்து எம்.எல்.ஏக்களை வளைக்கும் வேலையில் பா.ஜ.க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.கவின் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வீரலட்சுமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ' தமிழின படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் என்றுமே காவிரி உரிமை பிரச்சனையில் தீர்வு ஏற்படுத்தி கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தாது என்பது வரலாறு.
ஆனால் இப்போது கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எடியூரப்பா காவிரி பிரச்சனையில் ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் நீண்டநாள் பகையை உடைத்து சமாதானத்தை ஏற்படுத்துவார் என்று நாம் எதிர்பார்கின்றோம்.
தற்போது கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எடியூரப்பாவுக்கு தமிழர்முன்னேற்றப்படையின் வாழ்த்துக்கள்' எனக் கூறியிருக்கிறார்.