மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.. வீரலட்சுமி "பரபரப்பு"அறிவிப்பு
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு பெரிய "அடி" விழுந்துள்ளது. அதாவது வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப்படை அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக கூறி "ஷாக்" கொடுத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் கடைசி நேரத்தில் வந்து இணைந்தவர்தான் வீரலட்சுமி. வைகோவே நேரடியாக இவரை விஜயகாந்த் வீட்டுக்குக் கூட்டிப் போய் அறிமுகப்படுத்தி பொன்னாடை போர்த்த வைத்து கூட்டணியில் ஐக்கியமாக்கினார். பல்லாவரம் தொகுதியையும் இவருக்குக் கொடுத்து பம்பரம் சின்னத்திலும் போட்டியிட வைத்தார்.
பாவம், விஜயகாந்த் உள்ளிட்டோர் சந்தித்ததைப் போல பரிதாபகரமான தோல்வியைத் தழுவினார் வீரலட்சுமி. தற்போது கூட்டணியை விட்டு விலகி விட்டாராம். ஏங்க என்ன காரணம் என்றார், வைகோவுடன் கொள்கை ஒத்துப் போகவில்லை, விலகுகிறோம் என்று கூறி ஜெர்க் அடிக்க வைக்கிறார் வீரலட்சுமி.
தனது விலகல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்று அறிவித்து தமிழ் நெஞ்சங்கள் அத்தனை பேரையும் "அதிர" வைத்துள்ளார்.
வைகோவின் கொள்கை, செயல்பாடு என பலவற்றிலும் முரண்பாடு உள்ளது. அவர் முதலில் பேசியது வேறு, பின்னர் பேசியது வேறு. இதனால்தான் நாங்கள் கூட்டணியை விட்டு விலகியுள்ளோம் என்று விளக்கியுள்ளார் வீரலட்சுமி.
எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் முதல் எதிரியாக இருந்தது. ஆனால் வைகோவின் செயல்பாடு திமுகவை முதல் எதிரியாக நினைத்து இருந்தது. இது சரிவரவில்லை. எனவேதான் விலகி விட்டோம் என்று பேசுகிறார் வீரலட்சுமி.
இந்த விலகல் முடிவை விட இன்னொரு பயங்கர பரபரப்பான முடிவையும் வீரலட்சுமி எடுத்துள்ளார். அதாவது லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறதாம். இதற்காகவே ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார் அவர். அக்கட்சிக்கு அகில இந்திய தமிழர் முன்னேற்றக் கட்சி என்று பெயராம்.
இதுவரை வீரலட்சுமியாக மட்டுமே வலம் வந்தார்.. என்று 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்தாரோ அன்றே அவர் தைரியலட்சுமியாகி விட்டார்!
தேமுதிக போயாச்சு, தமாகா போயே போச்சு.. இப்ப வீரலட்சுமியும் எஸ்கேப்.. திருமாவளவனும் திமுக பக்கம் பார்க்க ஆரம்பித்து விட்டார்.. ஆக, மக்கள் நலக் கூட்டணியின் நிலை உண்மையிலேயே ரொம்பக் கஷ்டம்தான்.!