பல்லாவரத்தில் வீரலட்சுமி, தாராபுரத்தில் நாகை. திருவள்ளுவன்: பம்பரத்தில் போட்டி
சென்னை: தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமி, பல்லாவாரம் தொகுதியிலும், தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நாகை. திருவள்ளுவன் தாராபுரம் தொகுதியிலும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தகவலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார்.
மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தேமுதிக இணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.
மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமியும், தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளூவனும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு பல்லாவரம், தாராபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருவள்ளூர், குறிஞ்சிப்பாடி, கடலூர், குன்னம், ஜெயங்கொண்டம் ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. நாகை திருவள்ளுவனுக்கு திருப்பூர் அல்லது கோவை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தனித்தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் பல்லாவரத்தில் வீரலட்சுமி போட்டியிடுகிறார். நாகை திருவள்ளுவன் தாராபுரத்தில் போட்டியிடுகிறார். பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளராக சி.ஆர். சரஸ்வதியும், திமுக வேட்பாளராக இ.கருணாநிதியும் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தனி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக வேட்பாளராக கே.பொன்னுசாமி போட்டியிடுகிறார்.