தென்இந்திய மக்களை கறுப்பர் எனக் கூறுவதா?தருண் விஜயை கண்டித்து ஏப்.14-ல் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
தருண் விஜயை கண்டித்து ஏப்ரல் 14 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தென் இந்திய மக்களை கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து வரும் 14 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான பஞ்சான்யாவின் மேனாள் ஆசிரியருமான தருண்விஜய் - டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்தியாவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்தியர்கள் இன வெறியர்கள் அல்ல; நாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும்? என்று கூறியுள்ளார்.
இது நாடாளுமன்றம்வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சமூக வலைதளங்களிலும் அனல் பறக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.
தென்னாடு பிரியும்!மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே நறுக்கென்றும், சுருக்கென்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். தென்னிந்தியாவில் வாழக்கூடிய நாங்கள் எல்லாம் இந்தியர்களா? இல்லையா? என்ற கேள்வியோடு நிறுத்திடவில்லை; இம்மாதிரியான பேச்சுகளைப் பி.ஜே.பி. அனுமதித்தால், தென்னாடு தனியாகப் பிரியும் நிலை ஏற்படும் என்று அனல் கக்கப் பேசியுள்ளார். அவரது பேச்சுக்குப் பெரும் ஆதரவும் இருந்தது. அவை மூன்றுமுறை ஒத்தி வைக்கவும்பட்டது.
நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்லக்கூடிய தேசியத் திலகங்கள், பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தினர் தருண்விஜய் கருத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றனர்? தருண் விஜய் பேச்சைக் கண்டித்து பி.ஜே.பி. தரப்பில் இதுவரை ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் வடநாடு - தென்னாடு, ஆரியர் - திராவிடர் என்ற வேறுபாட்டை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அவர்களின் மனதில் உள்ளதுதான் இப்படியொரு கருத்தாக வெளிவந்துள்ளது என்பது விளங்கிடவில்லையா?
தருண்விஜய் வேடம் கலைந்தது. ஒப்பனை இல்லா உண்மை உருவம் உலா வருகிறது இதன்மூலம்! திராவிடர்களே, புரிந்துகொள்ளுங்கள் - உழைப்பவர் கறுப்பாக இல்லாமல் எப்படி மஞ்சளாக இருக்க முடியும்? ஜாதி, மத உணர்வுள்ளவர்கள் சிந்தனை என்பது இப்படி எவரையும் பிரித்துப் பார்க்கும், பேதப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டதுதான் என்பதற்குத் தருண் விஜய் பேச்சே உதாரணமாகும்.
இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.