கவிக்கோவின் கவிதைகள், முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு முதுகெலும்பு தரும்: வீரமணி பேச்சு
சென்னை: கவிக்கோவின் கவிதைகள், முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு முதுகெலும்பாக திகழும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறினார்.
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று மாலை நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கவிஞர் வைரமுத்து உள்பட தமிழ் இலக்கியவாதிகளும், தமிழரிஞர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, இயற்கையின் கோணல் புத்தி காரணமாக அப்துல் ரகுமானை நாம் இழந்து விட்டோம், ஆனால் கவிக்கோவை நாம் இழக்கவில்லை. கவிக்கோ என்ற புள்ளி, ஜாதி, மதம், பேதமின்றி அனைவரையும் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. கவிக்கோவின் கவிதைகள், முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு முதுகெலும்பு தரும். இவ்வாறு வீரமணி பேசினார்.
இதன் பின்னர் பேசிய திருநாவுக்கரசர், அறிஞர்களை பற்றியும் கவிதை எழுதியவர், அரசியலில் உள்ள லஞ்சத்தை பற்றியும் கவிதை எழுதியவர் அப்துல் ரகுமான். கம்பனுக்கு தோன்றாத கற்பனைகளும் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு தோன்றின. சாகா வரம் பெற்ற கவிஞராகவும் சாதி மதம் கடந்து செயல்பட்டவராகவும் இருந்தார், எதற்கும் அடிமையாகாதவர் கடைசி வரை தமிழ்க்கவிஞராக வாழ்ந்தவர், பதவி ஆசை பண ஆசை அறவே இல்லாதவர். பணம், புகழ் என எதற்கும் ஆசைப்படாதவர், பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவரின் புகழ் வாழ்க என்றார்.