மழையால் நிரம்பும் ஏரிகள்: சென்னைக்கு வருது வீராணம் தண்ணீர்... குடிநீருக்கு விநியோகம்
வடகிழக்குப் பருவமழையால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்துள்ளது.
Recommended Video
சென்னை: வடகிழக்கு பருவமழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இன்று முதல் சென்னைக்கு வழங்கும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் சுட்டெரித்த அக்னி நட்சத்திர வெயிலுக்கு குடிநீர் தேவை அதிகமாக இருந்ததால், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்தது.
அனைத்து ஏரிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருந்தது. இதில் சோழவரம் ஏரி முழுமையாக வறண்டு விட்டது. இதனால் சென்னையில் குடிநீருக்காக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குடங்களுடன் அலைந்த மக்கள்
போரூர் ஏரி, கல் குவாரிகள், விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் மக்கள் அவதி அடைந்தனர். மக்கள் குடங்களுடன் பல பகுதிகளுக்கு அலைந்தனர்.
வடகிழக்குப் பருவமழை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் உள்பட 4 ஏரிகளில் 11,057 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். தற்போது பெய்துள்ள மழையால் 4 ஏரிகளில் 3185 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 35 சதவீதமாகும்.
சென்னைக்கு குடிநீர்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதியும், பாசனத்துக்காகவும் வீராணம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு ஓராண்டுக்கு பின் குடிநீருக்காக திறந்து விடப்பட்டது.
சென்னை ஏரிகளில் தண்ணீர்
ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் சென்னை நகருக்கு அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் விரைவில் முழுமை அளவு 83 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வாய்ப்பு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் எஸ்.பி வேலுமணி
சென்னையில் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, இன்றுமுதல் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.
ஏரிகளில் அதிகரிப்பு
சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். குடிநீர் செல்லும் குடிநீர் விநியோகக் குழாயின் கடைசிப் பகுதியிலும், குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்தபின் குடிநீர் வழங்கப்படும் என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஏரிகள் நிரம்பவில்லை
ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு பூண்டி ஏரியில் 656 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 464 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 11152 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1211 மில்லியன் கன அடியும், வீராணம் ஏரியில் 881 மில்லியன் கன அடியும் உள்ளது.
வதந்திகளை நம்பாதீர்கள்
5 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் 35 விழுக்காடு நீர் மட்டுமே ஏரிகளில் வந்துள்ளது. அனைத்து ஏரிகளும் தமிழக அரசின் சார்பில் அலுவலர்கள் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். ஆகையால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.