திமுக-விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்: அன்பழகன் உருக்கம்
சேலம்: திமுக இயக்கத்திற்கு தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம் என நினைவு கூர்ந்துள்ளார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்.
நேற்றிரவு சேலம் சென்றடைந்தார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன். அதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் பூலாவரியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. செல்வகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அன்பழகன் பேசியதாவது:-
அர்ப்பணிப்பு...
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அண்ணா காலத்தில் இருந்து தி.மு.க. இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.
நிலைத்து நிற்கும் தொண்டு...
சேலம் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு காரணமானவர். அவரது தொண்டின் மூலமாக கிடைத்த மக்கள் ஆதரவை தி.மு.க. கழகத்திற்கான ஆதரவாக மாற்றியவர். அவரது தொண்டு என்றும் நிலைத்து இருக்கும்.
புதிய வளர்ச்சித் திட்டங்கள்...
சேலம் மாநகரிலும் பல்வேறு விதமான புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தந்தை பெரியார் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமே அதற்கு ஒரு உதாரணம்.
பெரிய இழப்பு...
அவரது இழப்பு தி.மு.க.வுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு. அந்த இழப்பை வீரபாண்டி ராஜா, சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடு செய்து மாவட்ட கழகத்துக்கு வெற்றி தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.